Perambalur: Two Locations Selected for Holding Public Meetings in the Town — Collector Informs!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சங்கங்கள் மற்றும் அரசு அலுவலர்களுடளான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் போலீஸ் எஸ்.பி அனிதா முன்னிலையில் நடந்தது. அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:
அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சங்கத்தினர் பொதுக்கூட்டங்களை நடத்தும்போது நீதிமன்றத்தின் உத்தரவின்படி வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் முறையாக பின்பற்ற வேண்டும். பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம், போலீசார் பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுக் கூட்டங்களை நடத்துவதோடு, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும், பங்கேற்பாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருக்கும் வகையிலும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
தற்போது, வானொலித்திடல், பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் ஆகிய இடங்கள் பொதுக்கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் சார்பில் ஆட்சியேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது மேற்கண்ட 2 இடங்களில் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இது தவிர மாவட்டத்தின் பிற முக்கிய பகுதிகளில் எங்கெங்கு பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி தேவை என்ற தகவலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முறையாக எழுத்துப்பூர்வமாக வழங்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட இடங்கள் பொதுக்கூட்டம் நடத்த உகந்ததா என போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கூட்டாய்வு செய்து இடம் தேர்வு செய்யப்படும், என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், வருவாய், காவல்துறை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரமுகர்கள், சங்கங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497