Perambalur: Van-auto head-on collision: One dead! 5 injured!
பெரம்பலூர் அருகே இன்று மதியம் அசோக் லைலேண்ட் தோஸ்த் பிக் -அப் வேனும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானர். ஆட்டோவில் வந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுகன்பூர் அருகே உள்ள தெற்கு மாதவியை சேர்ந்தவர் பெருமாள் மகன் செல்வராஜ் (50), ஆட்டோ டிரைவர், இவர், அவரது ஆட்டோவில் இன்று மதியம், சித்தளியை சேர்ந்த லட்சுமி (60), என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அரியலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது லட்சுமியின் உறவினர்கள் மதியழகி (37), இவரது மகன் தாமரைக்கண்ணன் (17), மருதாம்பாள் (30), ஆகியோர் ஆட்டோவில் சித்தளியில் இருந்து அரியலூர் மருத்துவமனைக்கு உடன் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மதியழகன் (24), டிரைவர். இவர் தஞ்சாவூரில் இருந்து மருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு, திருவண்ணாமலைக்கு அசோக் லைலேண்ட் தோஸ்த் வேனில் சென்று கொண்டிருந்தார். வேன், பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் அருகே உள்ள ஸ்ரீராம் மஹால் அருகே வந்த போது, எதிரே அரியலூர் நோக்கி வந்த ஆட்டோ மீது படுபயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், வேனும் ஆட்டோவும் உருண்டு, சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்தது. ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவர் உள்பட 5 பேரும் அரியலூர் மருத்துவமனைகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை போலீசார் சரிசெய்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.