பெரம்பலூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சியில் பெரிம்மாபாளையம் செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரியும், 24 மணி நேரமும் கள்ளத்தனமாக விற்பனையாகும் மதுவை தடை செய்ய வலியுறுத்தியும் அவ்வூரை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்தவர்கள் மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் கடையை பூட்டு போட முயன்ற பெண்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளை பெண்கள் கடையை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஓரிரு அவகாசம் வழங்கினர். இது குறித்து மாவட்ட ஆட்சியருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.