Perambalur: ‘Educational Awakening’ event organized by TMMK; high-achieving students honored with prizes!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அஸ்வின்ஸ் கூட்டரங்கில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கல்வி எழுச்சி விழா மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் குதரத்துல்லா தலைமையில் நடந்தது. ம.ம.கட்சி மாவட்டச் செயலர் முகம்மது இலியாஸ் அலி, மாவட்ட பொருளாளர் சையது உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் மீரா மொய்தீன், சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூகநீதி படைப்பாளர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஹிர் பாட்சா, பொதுக் கல்விக்கான மாநில மேடை பொதுச் செயலர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலர் அப்துல் சமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழரிசை மாத இதழ் ஆசிரியர் சா. சின்னசாமிக்கு இதழியல் சுடரொளி விருதும், பெரம்பலூர் இளைஞர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சத்யாவுக்கு சமூக நல்லிணக்க சுடரொளி விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது. விழாவில், அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி. கணேசன், ஜமாத் உலமா சபை மாவட்டத் தலைவர் முஹம்மது முனீர், நகர காஜி அப்துல் சலாம் தாவூதி, மாவட்ட துணைத் தலைவர் ஹயாத் பாஷா, துணைச் செயலர்கள் முகமது இஸ்மாயில், சையது பாதுஷா, அப்துல் கஃபார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலர் முஹம்மது அனிபா உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். முன்னதாக, தமுமுக மாவட்டச் செயலர் முகமது இலியாஸ் வரவேற்றார். நகரத் தலைவர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!