Perambalur: Speech competition held to mark Kamarajar’s birthday; Nadar associations award cash prizes to winning students!

நாடார் மகாஜன சங்கம், பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி பெரம்பலூர் சின்னமணி ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவின்முறை சங்க மருத்துவ ஆலோசகர் மோகன் வரவேற்றார். பேச்சு போட்டிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் அவனி மாடசாமி துவக்கி வைத்து பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவின் முறை சங்க தலைவர் நடராஜன், செயலாளர் தினகர், பொருளாளர் பால்ராஜ், துணைத் தலைவர் சின்னமணி துணைச் செயலாளர் முருகேசன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் வாழ்த்தி பேசினார்.
போட்டியின் நடுவர்களாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் செல்வராஜ், மாயகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டனர். பின்னர் மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. போட்டியில் 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும், 11, 12 வகுப்பு மாணவர்களுக்கும், ஒவ்வொரு பிரிவிலும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 7 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ 5 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ரூ 3 ஆயிரமும் என மொத்தம் ரூ 45 ஆயிரத்தை பெரம்பலூர் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்க பரிசாக வழங்கினார். மேலும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
விழாவை அயன்பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் ஒருங்கிணைத்தார். பெரம்பலூர் மாவட்ட நாடார் மகாஜன சங்க மாவட்டச் செயலாளர் அருள்மொழிச்செல்வி அழகேசன் நன்றி கூறினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497