பெரம்பலூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் கோடைகால கலைப்பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இதில் 95 சிறுவர் – சிறுமியர்கள் சேர்ந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஜவகர் சிறுவர் மன்றம் வெங்கடேசபுரத்தில் உள்ள அரசு இசைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் குரல் இசை, பரத நாட்டியம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைப் பிரிவுகளில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கலை பண்பாட்டு துறை சார்பில் கலைத்திறனை வளர்த்துக்கொள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் குணசேகரன் அறிவுரையின் பேரில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் அரணாரை நடராஜன் தலைமை வகித்தார்.

19-ந்தேதி வரை 10நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்த சிறப்பு முகாமில் தினமும் காலை 10மணிமுதல் மதியம் 1 மணிவரை குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைப்பிரிவுகளில் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் – சிறுமியருக்கு பரத ஆசிரியை அன்புசெல்வி, ஓவிய பயிற்றுனர் ஹேமாஸ்ரீ, குரலிசை ஆசிரியர் இலக்கியா, சிலம்பம் பயிற்றுனர் முருகேசன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சி முகாமில் முதல் நாள் 95 சிறுவர் – சிறுமியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பயிற்சி நிறைவில் முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!