The thief who tried to escape by stealing from a house near Perambalur was caught by the public and handed over to the police

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையில் வசித்து வருபவர் குமார் ( 40) எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு வேப்பந்தட்டையில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று சாமி கும்பிட சென்று விட்டு, திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதோடு, வீட்டின் உள்ளே திருடன் ஒருவன் இருப்பதும் அவன் மாடிப்படி வழியாக தப்பித்து செல்ல முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருடன் திருடன் என குமார் கூச்சலிட்டார். இதைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது திருடன் மாடியில் இருந்து கீழே குதித்தான். அதில், திருடனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவனை பொதுமக்கள் பிடித்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் திருட வந்தவன் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பது தெரியவந்தது. அவனிடம் இருந்து குமார் வீட்டில் திருடப்பட்ட நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், வெங்கடேசை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். திருடன் தப்பி செல்லாத வகையில் ஆஸ்பத்தியில் அவனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்பந்தட்டையில் கடந்த ஒரு வாரத்திற்குள் 2 வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறிய நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!