Today, polio drops in the Perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் 384 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடக்கிறது
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று துணை இயக்குநர் சுகாதார பணிகள் மருத்துவர் சம்பத் சங்குபேட்டை அங்கன்வாடி மையத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இளம்பிள்ளை வாத நோயை, இந்தியாவில் முழுமையாக ஒழிக்க பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து 02.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய தேதிகளில் கொடுக்க ஏற்பாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளி இடங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆக மொத்தம் 384 மையங்களில் இந்த முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போலியோ சொட்டு மருந்து மையங்களில், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் என மொத்தம் 1,528 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெற்றோர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம்.
மேலும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் இரண்டாம் கட்டமாக ஏப்.30 அன்றும் நடைபெறவுள்ளது. எனவே பெற்றோர்கள் தவறாது தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொண்டு, இளம்பிள்ளை வாதநோயிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தேசிய சுகாதார இயக்க உதவி திட்ட மேலாளர் தினேஷ், வட்டார மருத்துவர் விஜய் ஆனந்த், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அனிதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.