Two killed by lightning! Tragedy while drinking alcohol under a tree near Perambalur !!
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கோனேரி ஆற்றுப் பாலத்தின் வடமேற்கு பகுதியில் பெரம்பலூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது.
அதில், பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்த சின்னசாமி மகன் செல்லதுரை (26), கவுள்பாளையம கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராமர் (29), மற்றும் பெரம்பலூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் எலி @ வெங்கடேசன் (18) என்ற வாலிபர்கள் மூவரும் இன்று மதியம் அங்குள்ள புளியமரத்தின் அடியில் மதுஅருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது, மூவரில் எலி @ வெங்கடேசன் சிறுநீர் கழிக்க மரத்தை விட்டு தள்ளி சென்றுள்ளான். அப்போது மதியம் சுமார் 2 மணியளவில், காற்றும் மழையும் வீசிக் கொண்டிருந்தது.
வாலிபர்கள் செல்லதுரை, ராமர் இருவர் மீதும் இடி பலத்த சத்தத்துடன் தாக்கியது. அதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் அதிர்ச்சசி அடைந்த வெங்கடேசன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த, வருவாய் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இதே போல, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் செல்வராணி – குமார் தம்பதியினருக்கு சொந்தமான 2 பசு மாடுகளும் இடிதாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானது.