பெரம்பலுார் அருகே நாட்டு வெடி குண்டு வெடித்தில் மூதாட்டி படுகாயமடைந்தார்.
பெரம்பலுார் மாவட்டம் நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி முத்தம்மாள்,70, இவருக்கு சண்முகம்,45, கணேசன்,45, செல்வகுமார்,38, ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
தொண்டப்பாடி கிராமத்திலிருந்து நெய்க்குப்பை கிராமத்துக்கு செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் முத்தம்மாள் வசித்து வருகிறார். இவர்
நேற்று மாலை ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த நல்லம்மாள் என்பவர் முத்தம்மாள் வீட்டுக்கு இரண்டு நபர்கள் வந்ததாகவும், வீட்டில் ஒரு இரும்பு பெட்டியை வைத்து சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து முத்தம்மாள் அந்த பெட்டியை திறந்தார். அப்போது அந்த பெட்டி அதிக சத்ததுடன் வெடித்தது.
இதில் முத்தம்மாளின் கைகள் கருகி படுகாயமடைந்தார். இத்தகவலறிந்த வ.களத்துார் போலீஸார் முத்தமாளை மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறி்த்து வ.களத்துார் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்