பெரம்பலூர்; பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை மாலை சாலையோரம் நடந்து சென்ற 2 பசுமாடுகள் மீது டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவை உயிரிழந்தன. மேலும், மாடுகளை ஓட்டிச்சென்ற விவசாயி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் 1-வது வார்டு, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் அன்பழகன் (31) விவசாயி. இவர், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வியாழக்கிழமை மாலை தனது 2 பசுமாடுகளை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பெரம்பலூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற டிப்பர் லாரி பசு மாடுகள் மீது மோதியதில் அவை, அதே இடத்திலேயே உயிரிழந்தன. மேலும், மாடுகளை ஓட்டிச்சென்ற அன்பழகனும் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று காயமடைந்த அன்பழகனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து போலீஸார், டிப்பர் லாரி ஓட்டுநர் முத்துசெல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.