தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் பட்டாசு சிறப்பு விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது, திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பட்டாசு விற்பனை செய்யும் வகையில் அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடியின் பட்டாசு விற்பனை பிரிவு திறப்பு விழா இன்று எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம்சுப்பிரமணியன் சகுந்தலா திருமண மண்டபத்திற்கு முன்புறம் உள்ள அங்காடியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடியின் பட்டாசு விற்பனைப்பிரிவை திறந்து வைத்து தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.18 லட்சத்திற்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.25 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.30 லட்சத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பட்டாசு மற்றும் மத்தாப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பிரபல நிறுவனங்களின் வெடிகள், பேன்சி ரக வெடிகள், மத்தாப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் ந.சேகர், கூட்டுறவு துணைப் பதிவாளர் கிருஷ்ணசாமி, கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.