In Perambalur, AIADMK erupted and celebrated with sweets
அதிமுக கட்சி அலுவலக சாவியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க ஹைகோர்ட் உத்தரவினால் மகிழ்ச்சி அடைந்த பெரம்பலூர் அதிமுகவினர் வெடிவெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இரு தரப்பினரிடையே ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நடந்த மோதலால் வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு கடந்த 11ம்தேதி சீல் வைத்தனர். இதனால் சீலை உடைத்து அதிமுக அலுவலகத்தை கட்சியினர் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என இதற்கு இரு தரப்பினரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் அதிமுக கட்சி அலுவலக சாவியை கட்சியின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தனது கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்க கூடாது. அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் என உத்திரவிட்டார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள், பெரம்பலூர் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமையில் மாவட்ட பொருளாளர் பூவைசெழியன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன்,செல்வமணி ஆகியோர் முன்னிலையில் அதிமுகவினர் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகம் முன்பு பட்டாசுகள் வெடித்தும், பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோஷமிட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ராணி, வீரபாண்டியன், லெட்சுமி, குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் அருணாபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்