பெரம்பலூர் : பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு மையம் மூலம் அளிக்கப்படும் எலக்ட்ரிக்கல் மற்றும் பம்ப்செட் நீக்குவது தொடர்பான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூன் 29 ஆம் தேதி முதல் எலக்டிரிக்கல் மற்றும் பம்ப்செட் பழுது நீக்குவது குறித்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
பயிற்சி பெற 18 முதல் 35 வயதுக்கு குறைவாகவும், குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
30 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் பயிற்சியில் வீட்டு ஒயரிங், பம்ப்செட் பழுது நீக்கம் மற்றும் அனைத்து விதமான மோட்டார்களுக்கும் காயில் சுற்றுவதற்கும், அதிநவீன உபகரணங்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.
காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சியின் போது, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அளிக்கப்படும்.
பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியற்றின் நகல், 3 பாஸ்போர்ட் அளவு மற்றும் 2 ஸ்டாம்ப் சைஸ் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.