பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கூர்கா சம்பவ இடத்திலேயே இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், வண்ணான் குட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பகதூர் சிங் மகன் மங்கூள் சிங் (41). இவர், அப்பகுதியில் கூர்கா பணியில் ஈடுபட்டு வந்தாராம். இந்நிலையில், அரியலூரிலிருந்து பெரம்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தார். மேலமாத்தூர் அருகே வந்தபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மங்கூள் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி தேவி அளித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.