பெரம்பலூர்:மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்தள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொது சேவை மையங்கள் மூலம் பட்டா மாறுதலுக்கான மனுக்கள் பெறும் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டத்தில் மட்டும் நடைபெற்று வருகின்றது. தற்போது இம்முறை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இதர வட்டங்களான வேப்பந்தட்டை, ஆலத்தூர் மற்றும் குன்னம் வட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் வேப்பந்தட்டை, குன்னம் மற்றும் ஆலத்தூர் வட்டத்தினைச் சார்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல் மனுக்களை இணைய தளம் வழியாக இனி அருகிலுள்ள பொது சேவை மையத்திலேயே விண்ணப்பித்து கொள்ளலாம். வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் 54 பொது சேவை மையங்களும், புது வாழ்வு திட்டத்தின் மூலம் 67 பொது சேவை மையங்களும், வட்ட அலுவலகங்களில் அரசு கேபிள் டி.வி. கழகம் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எல்காட் நிறுவனம் மூலமும் பொது சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, பட்டா மாறுதல் வேண்டி இனி பொது மக்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திலேயே விண்ணப்பம் செய்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.