பெரம்பலூர் : வடகிழக்கு பருவ மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் இடிந்து விழுந்த சேதமடைந்துள்ள விவசாய கிணறகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த, அச்சங்கத்தின் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் கோரிக்கைகளை விளக்கி பேசியதாவது:
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி, மக்காசோளம், மரவள்ளி, பாக்கு, எலுமிச்சை, சின்னவெங்காயம், மஞ்சள், மரவள்ளி, கருணைக்கிழங்கு, நிலக்கடலை, கோலியஸ் கிழங்கு ஆகிய பயிர்களின் பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் முறையாக ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழையல் இடிந்து விழுந்த விவசாய கிணறுகளை ஆய்வு செய்து, அதற்குறிய நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த மின் கம்பங்கள், மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்.
தள்ளுபடி செய்யப்பட்ட மண் வளப் பாதுகாப்பு உள்ளடக்கிய தக்காவி கடன், விவசாயிகளின் வில்லங்க சான்றுகளில் குறிப்பிடப்படுவதை நீக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மக்காசோளம், பருத்தி, முருங்கை, உளுந்து, காய்கறி உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதோடு, வன விலங்கு பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க வேண்டும்.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் உரிய இழப்பீடு வழங்கவும், பிர்கா பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கும் தற்போதைய நடைமுறையை மாற்றி, தனிப்பட்டா விவசாயிகளின் பாதிப்புக்கும் இழப்பீடு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீரை முழுமையாக சேமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பி. மாணிக்கம், மாவட்டச் செயலர் வி. நீலகண்டன், மாவட்டப் பொருளாளர் ஏ. மணி, அரியலூர் மாவட்டச் செயலர் வி. விஷ்வநாதன், பொருளாளர் ஆர். தமிழ்வேல், வட்டாரப் பொறுப்பாளர்கள் துரைசாமி, சின்னசாமி, எஸ்.கே. செல்லக்கருப்பு, எம்.எஸ். ராஜேந்திரன், கே. மதியழகன், பி. கணேசன், ராஜாமணி, என். செந்தில், ஆர். சுந்தரராஜன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.