பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

இந்த இ-சேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த பல்வேறு சேவைகள் இணைய வழி சேவை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சேவை மையங்கள் மூலமாக பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, ஆதார் அட்டை பதிவு செய்யும் போது தெரிவிக்கப்பட்ட செல்போன் எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதியும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில், தற்போது புதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இ-சேவை மையங்களில் நிரந்தரப் பதிவு செய்ய ரூ. 50ம், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.5ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ.20ம் கட்டணமாக பெறப்படும்

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவு கட்டணமான ரூ.50ம், மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பணம் செலுத்துவதற்கான ஒப்புகைச் சீட்டினையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த சேவைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!