பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூரில் உள்ள விநாயகர், குண்டுபடா செல்லியம்மன், வேம்படியான், ஆகாசதுரை, அய்யனார் கோவில் மற்றும் தேவதைகளின் கோவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நாளை வியாழக்கிழமை நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த செவ்வாய் கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, நவக்ரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பிரவேச பலி நடைபெற்றது. தொடர்ந்து இன்று புண்யாவாசனம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை, மூன்றாம் கால யாக பூஜை, விமானம் கலசம் வைத்தல், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றது.
நாளை வியாழக்கிழமை அதிகாலையில் மங்கள் இசை, தேவார திருமுறை, நான்காம் கால யாக பூஜை, சுவாமிகள் கண்திறப்பு, அபிஷேக அலங்கார ஆராதனை, கோ பூஜை, நாடி சந்தானம் உடன் பூணாஹூதி தீபாரதனை நடைபெற உள்ளது.
தொடர்ந்து காலை 8.30 மணியளவில் கடம் புறப்பாடு செய்து கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் முக்கியஸ்தர்கள் செய்து வருகிறார்கள்.