பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கிணறு வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே கூலித் தொழிலாளி ஒருவர் இன்று மாலை உயிரிழந்தார். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
குன்னம் அருகேயுள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த முத்து மகன் ராஜேந்திரனின் வயலில் புதிய கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது, பாறைகளை தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்துள்ளனர். இதில், ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர் வெடிக்கவில்லையாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தொழிலாளர்கள் 3 பேர் கிணற்றில் இறங்கி பணிபுரிந்து கொண்டிருந்தபோது, எதிர்பாரதவிதமாக டெட்டனேட்டர் ஒன்று வெடித்தது. இதில் பலத்த காயமடைந்த வாலிகண்டபுரத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் மூக்கன் (36) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ரவி, வெங்கடேஷ், தங்கராசு ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.