அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சியிலும் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை பாடாலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (04.08.16) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி துவங்கி வைத்தார்.
இம்முகாமில் 6-18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் மனவளர்ச்சி குன்றிய 91 குழந்தைகளும், கை,கால் பாதிக்கப்பட்ட 39 குழந்தைகளும், செவித்திறன் பாதிப்படைந்த 24 குழந்தைகளும், கண்பார்வை குறையுடையோர் 62 குழந்தைகளும் என 215 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இம் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இம்மருத்துவ முகாமில் மனநல மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, எலும்பு முறிவு மருத்துவர் தணிகாசலம், காது மூக்கு தொண்டை மருத்துவர் தேவேந்திரன் ஆகியோர் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை பரிசோதித்தனர்.
இவர்களில் 2 குழந்தைகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலியும், 2 குழந்தைகளுக்கு சக்கர நாற்காலியும், 7 குழந்தைகளுக்கு நடைப்பயிற்சி சாதனம்யும், 4 குழந்தைகளுக்கு கார்னர் சீடடும், 5 குழந்தைகளுக்கு முடநீக்கியல் சாதனமும், 4 குழந்தைகளுக்கு காதொலி கருவிகளையும், 3 குழந்தைகளுக்கு மனவளர்ச்சி குறையுடையோருக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் 1 குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கும் என மொத்தம் 28 குழந்தைகள் உபகரணங்கள் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளில் 7 குழந்தைகளுக்கு தேசிய மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான அடையாள அட்டையும், 4 குழந்தைகளுக்கு காதொலி கருவியும் வழங்கப்பட்டது.
மேலும், வேப்பூர் ஒன்றியத்தில் 9.08.2016 அன்று வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 11.08.2016 அன்று வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பெரம்பலூர் ஒன்றியத்தில் 18.08.2016 அன்று பெரம்பலூர் அரசுமேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.
இம்மருத்துவ முகாம்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் ஊனம் தெரியும்படியான 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
பாடாலூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இராமகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர் வெங்கடாசலபதி, SSA உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், RMSA உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் காமராஜ் , அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.