பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே உள்ள அருமடல் கிராமத்தில் உள்ள சருக்குபாலம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் மகன் சதீஸ் (12), இவர் அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல்வெளியில் சுற்றி வந்துள்ளார். அப்போது அந்தப்பகுதியில் உள்ள கிணற்று ஒன்றில் புறா கூடு கட்டியிருப்பதை அறிந்த சிறுவர்கள், அதனை பிடிப்பதற்காக கல் எறிந்தனர்.
கல் எறிந்ததில் கூட்டில் இருந்த புறா கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. புறாவை எடுப்பதற்காக சுமார் 50 அடிக்கும் மேல் ஆழமுள்ள கிணற்றில் இருந்த நீர் இரைக்கும் மோட்டார் பைப் லைன் வழியாக சதீஸ் இறங்கி விட்டான்.
கிணற்றுக்குள் தண்ணீர் மட்டம் சுமார் இரண்டரை அடி மட்டுமே தண்ணீர் இருந்ததால் மாணவன் நீரில் மூழ்காமல் தப்பித்தார். கிணற்றில் புறாவை பிடித்துக் கொண்டு மேலே ஏறே முயற்சி செய்த போது கைகளில் தண்ணீர் ஈரம் இருந்ததால் வழுக்கி விட்டது.
இதனால், மாணவன் கிணற்றில் இருந்து வெளி வர முடியாமல் கிணற்றுக்குள் சிக்கி கொண்டார். உடன் வந்த சிறுவர்கள் ஊருக்குள் சென்று மக்களிடம் தகவல் தெரிவித்தனர்.
இத்தகவலை அறிந்த பெரம்பலுார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் கோட்ட அலுவலர் மதியழகன் மேற்பார்வையில் நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் படைவீரர்கள் ராஜீ, செந்தில்குமார், பழனிசாமி, தனபால், பால்ராஜ், தெய்வமணி, ஜெகன் ஆகியோரை கொண்ட மீட்பு குழுவினர் கிணற்றுக்குள் இறங்கி சதீஸை உயிருடன் மீட்டனர்.