பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அரசு அலுவலர், நீதிமன்றப் பணிகளில் சட்ட ஆலோசனைகள் வழங்க சட்ட அலுவலர் நியமிக்கப்பட உள்ளார்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டு பி.எல். பட்டப் படிப்பு அல்லது ஒருங்கிணைந்த ஐந்தாண்டுகள் சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் தங்களது பெயரை தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிந்து வைத்திருப்பதுடன், உயர் நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றம் அல்லது மத்திய நிர்வாக தீப்பாயம் ஆகியவற்றில் குற்றவியல் பணி தொடர்பான சட்ட முன் அனுபவத்துடன் 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணியாற்றி இருக்க வேண்டும். எந்தவித குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருக்கக் கூடாது.
இந்தச் சட்ட அலுவலக பணி நியமனம் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையானது. முதல்கட்டமாக ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். மேற்படி சட்ட அவலுவலரின் பணியில் திருப்தி இல்லையெனில் அவரது நியமன ஒப்பந்தம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரால் ரத்து செய்யப்படும்.
சட்ட அலுவலராகப் பணிபுரிய விருப்பமுள்ளோர் மேலும் விவரம் அறிய உடனடியாக கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. எண்கள் : 04328 – 224910, 04328 – 224962 என்றும், மாதிரி விண்ணப்பப் படிவத்தை மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள நிர்வாகப் பிரிவு அலுவலரிடம் பெற்றும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.