பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே இன்று காலை வேன் மீது ஆம்னி பேருந்து மோதியதில் ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். வேன் ஓட்டுநர் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்தவர் வீரமணி (60). ஆடுகளை வாங்கி, விற்பனை செய்யும் வியாபாரியான இவர், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூரில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டுச் சந்தையில், ஆடுகள் வாங்குவதற்காக வீரமணி உள்பட ஆட்டு வியாபாரிகள் சிலர் மதுரையிலிருந்து வேனில் சிறுவாச்சூருக்கு காலை வந்தனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாச்சூர் நுழைவு வாயில் எதிரே ஆட்டுச் சந்தைக்கு செல்ல முயன்றபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து வேன் மீது மோதியது.
இதில், வேனில் இருந்த கம்பி மோதியதில் பலத்த காயமடைந்த வீரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், வேன் ஓட்டுநர் சேக்காளி (45) உள்பட ஆட்டு வியாபாரிகள் 8 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த பெரம்பலூர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த நபர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.