பெரம்பலூர் : விகளத்தூரில் நிற்காமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ளது வி.களத்தூர் கிராமம். இந்த கிராமத்திற்கு பெரம்பலூரில் இருந்து அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக அவ்வூரில் உள்ள தண்ணீர்த்துறை என்ற பேருந்து நிறுத்தத்தில் குறிப்பிட்ட அரசு நகர பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இன்றும் அதே போல் நிற்காமல் சென்றது.
அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று மாலை 8.30 மணியளவில் அவ்வழியாக வந்த பேருந்தை சிறைப்பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் தலைமையில் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இனி வரும் நாட்களில் பேருந்து , பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வது குறித்து, போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசினர். பின்னர், பேருந்தை பொதுமக்களிடம் இருந்து மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்ட்டது.