3 year jail for the VAO in the case of Rs.500 bribe to the farmer
விவசாயிக்கு சிட்டா, அடங்கல் சான்று வழங்க ரூ.500 லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், கிராம நிர்வாக அலுவலருக்கு நாமக்கல் கோர்ட்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாமக்கல் பரமத்திவேலூர் அருகேயுள்ள கட்டமரவாபாளையத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(வயது 57). இவர் பரமத்திவேலூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் டிராக்டர் கடன் வாங்ககுவதற்காக, புஞ்சை இடையார் கீழ்முகம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை கேட்டு விண்ணப்பம் அளித்தார்.
இந்த சான்றுகளைத்தர அப்போது அங்கு கிராம நிர்வாக அலுவலராக இருந்த முருகேசன் என்பவர், ரூ.500 லஞ்சம் கேட்டதாக மனோகரன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, 2009ஆம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி விஏஓ முருகேசனிடம் ரூ.500-ஐ மனோகரன் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நாமக்கல் சிஜேஎம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரனை முடிவடைந்து நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட விஏஓ முருகேசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.