A car crash on Lorry near Perambalur: A migrant was killed; 5 people were injured
பெரம்பலூர் அருகே லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் சென்னை நந்தனத்தை சேர்ந்த ஒருவர் பலியானார். இரண்டு பெண்கள் மற்றும் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் இளங்கோவன், இவர் தனது மனைவி ரேகா, மகள் தேன்மொழி மற்றும் பெற்றோர் கண்ணன், ஜானகியுடன் ஒரு இனோவா வாடகை காரில் சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி சாமி கும்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தார்.
கார், பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவு சாலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது கார் டிரைவர் குமார் கண்ணயர்ந்து தூங்கியதால், கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னே சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளனது.
இதில் காரின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த முதியவர் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இளங்கோவன், ஜானகி, ரேகா, தேன்மொழி, கார் டிரைவர் குமார் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் காரணமாக கல்பாடி பிரிவு சாலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும், விபத்து குறித்து லாரி மற்றும் கார் டிரைவர்களிடம் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.