Aadhaar link With voter card: Officials meeting with political parties in Perambalur!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் அடையாள அட்டையினை, ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியிலோ, ஒரே தொகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ளதா என்பதை கண்டறிவதற்காகவும் நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வழங்குவதற்காக படிவம்- 6பி என்ற புதிய படிவம் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியானது 01.08.2022 முதல் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது.
நேஷனல் வோட்டர் சர்வீஸ் போர்ட்டல் மற்றும் வோட்டர் ஹெல்ப்லைன் ஆப் ஆகியவற்றினை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக தாமாகவே தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம் அல்லது வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக ஆய்விற்கு வரும் பொழுது பூர்த்தி செய்யப்பட்ட படிவம்-6B உடன் ஆதார் அட்டையின் நகலினை தாக்கல் செய்வதன் வாயிலாகவும் இணைத்துக் கொள்ளலாம். இதற்கு, சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளன.
வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர விரும்பும் புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பத்துடன் ஆதார் எண்ணை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் எண் இல்லாத அல்லது தர இயலாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை தாக்கல் செய்யலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இப்பணி விரைவாக முடித்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
டி.ஆர்.ஓ அங்கையற்கண்ணி, ஆர்.டி.ஓ நிறைமதி, தாசில்தார்கள் சீனிவாசன்(தேர்தல்), கிருஷ்ணராஜ்(பெரம்பலூர்) அனிதா(குன்னம்) மற்றும் தி.மு.க, அ.தி.மு.க, பி.ஜே.பி, பி.எஸ்.பி, தே.மு.தி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.