After a year, the public besieged the minister who came to thank him for fulfilling his promises!
வெற்றி பெற்று ஓராண்டிற்கு பிறகு நன்றி சொல்ல சொந்த தொகுதிக்கு வந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை பொதுமக்கள் மறித்து முற்றுகையிட்டு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி நினைவூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியின் எம்.எல்.ஏவும், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு வெற்றி பெற்ற பின் ஓராண்டிற்கு பின்னர், இன்று நன்றி தெரிவிக்க ஆலத்தூர் ஒன்றியத்தில் பயணம் மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகுபாடி, காரை,தெரணி, சிறுகன்பூர், தெற்குமாதவி, சாத்தனூர் மற்றும் சாத்தனூர் குடிகாடு ஆகிய கிராமங்களில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தெற்கு மாதவி கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வெற்றி பெற்ற அமைச்சர் நன்றி சொல்ல வருவதை அறிந்த அப்பகுதிபொதுமக்கள் கிராம எல்லையில் ஒன்று திரண்டு மருதையாற்றின் பாலம் அருகே அமைச்சரின் காரை வழி மறித்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கிராமத்தின் வழியே செல்லும் மருதையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாகவும், கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் மழைக் காலங்களில் தண்ணீர் ஓட முடியாமல் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பினை பாழ் செய்வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
மேலும் கிராமத்தின் வழியே காவிரி -கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் தங்களுக்கு குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் குட்டை நீரை குடிக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தங்கள் ஊர் இளைஞர்களுக்கு பெண் கொடுக்க ஆர்வம் காட்டுவதில்லை என்றும், தெருக்களில் சாக்கடை நீர் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் ஆவேசத்துடன் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுக்களின் கோரிக்கைகள் குறித்து காலத்தில் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கொடுத்த உத்தரவாதத்தை தொடர்ந்து அவரது காருக்கு பெண்கள் வழி விட்டனர், பின்னர், தொடர்ந்து அமைச்சர் காரின் அங்கிருந்து புறப்பட்ட சென்றது.
பொதுமக்கள் அமைச்சர் காரை வழிமறித்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.