Breakfast scheme: To be implemented by nutrition workers: union strike in Perambalur!
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாநில அளவில் தர்ணா போராட்டத்தினை அறிவித்தனர்.
பெரம்பலூரில், கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம், மாவட்டத் தலைவர் சரஸ்வதி தலைமையில் நடந்தது.
மாநில செயற்குழு வெற்றிசெல்வி வரவேற்றார். துணைத் தலைவர் எஸ்.பெரியசாமி, இணை செயலாளர் சித்ரா, ஒன்றிய பொருளாளர் மீனா, ஒன்றிய தலைவர் தேன்மொழி ஆலத்தூர் தையமுத்து, வேப்பூர் ஜானகி, ஒன்றிய துணைத் தலைவர் வீரமணி, இணை செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கி.ஆளவந்தார் தொடக்க உரையும் து.செல்லப்பிள்ளை வாழ்த்துரையும் வழங்கினர். மாவட்ட செயலாளர் சவிதாராஜலிங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத் தலைவர் பெ.சுப்புகாளை நிறைவுரை ஆற்றினார்.
சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். அதே சமயத்தில் இத்திட்டத்தினை சத்துணவு ஊழியர்களை கொண்டே நடைமுறைப்படுத்த வேண்டும், மாணவர்களின் நலன் கருதி காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிட வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச குடும்ப ஓய்வூதியமாக 7ஆயிரத்து 850 ருபாய் வழங்கிட வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களின் 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் அழகேஸ்வரி நன்றி கூறினார்.