Chief Minister’s civil works in Perambalur district: Collector V. santha Visit !
பெரம்பலூர் பெரிய ஏரியில் தடுப்பு சுவர் கட்டும்பணி மற்றும் குரும்பலூர் பேரூராட்சியில் அனைக்கட்டு மற்றும் வரத்து வாய்க்கால் புனரமைக்கும் பணிகளை கலெக்டர் வே.சாந்தா,நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் நீர்வள ஆதாரங்களை பேணி பாதுகாக்கவும், நிலத்தடி நீர்வளத்தை பெருக்கவும், மழைநீரை விரையமின்றி சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் 14 பணிகள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளின் பங்களிப்போடு புணரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் பெரிய ஏரியில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி 1.4கி.மீ தூரத்திலும், தடுப்பு சுவர் நீளம் 73.50மீ நீளத்திலும், முதலாம் எண் மதகு பழுது பார்க்கும் பணி, 28 எண்கள் எல்லைக்கல் நடும் பணி என மொத்தம் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டிலும், குரும்பலூர் பேரூராட்சியில் அணைக்கட்டில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி 2கி.மீ நீளத்திலும், தடுப்பு சுவர் 39.00மீ நீளத்திலும், 1 எண் மதகு பழுது பார்த்தல் பணியும், 30 எண்கள் எல்லைக்கல் நடும் பணியும் என மொத்தம் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டிலும் விவசாயிகளின் பங்களிப்போடு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் பெரிய ஏரியில் 0.262 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்படுவதோடு 49.34 ஹெக்டேர் விளைநிலங்களும், குரும்பலூரில் கட்டப்படும் அணைக்கட்டால் 0.282 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்படுவதோடு 92.870 ஹெக்டேர் விளைநிலங்களும் பயன்பெறும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற பதிவு பெற்ற விவசாய சங்கங்களிடம் நடைபெற்று வரும் பணிகளின் தன்மை குறித்தும் மேலும் விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கலெக்டர் கேட்டறிந்தார். அதில் விவசாய சங்க பிரதிநிதிகள் அப்பகுதியில் கருவேல மரங்களை அகற்றவும், அணைக்கட்டுகளின் கரைகளை பலப்படுத்தவும் கோரிக்கை வைத்ததின் பேரில், அவற்றை அகற்றவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது அரசு பணியாளர்கள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.