Consultation Meeting on Implementation of Breakfast Scheme in Perambalur Government Schools; It was led by the Collector!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான “காலை உணவு திட்டத்தை” சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடந்தது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும், வருகையினை அதிகரிக்கவும், வேலைகளுக்கு செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையினை குறைப்பதற்கும் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்:

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று , தமிழ்நாடு முதலமைச்சரால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரம்பலூர் கிழக்கு, பெரம்பலூர் மேற்கு மற்றும் முத்து நகர் ஆகிய 3 தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதற்கு தேவையான நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை கட்டும் பணிகள், சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்து நகர் பள்ளியில் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் ரவா காய்கறி கிச்சடி, புதன் கிழமைகளில் அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வியாழக் கிழமைகளில் வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக் கிழமைகளில் சாமை கிச்சடி மற்றும் ரவா கேசரி(இனிப்பு) ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 3 பள்ளிகளிலும் சேர்த்து சுமார் 112 மாணவ, மாணவிகள் பயன் பெற உள்ளனர். மாணவ,மாணவிகளுக்கு புதிய எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்கப்பட உள்ளது. தரமான காய்கறிகள், மளிகை பொருட்கள் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும், சுவையானதாகவும் சுகாதார முறையில் வழங்கப்படுவதையும் அனைத்து அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்து நகர் பள்ளியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை வெங்கட பிரியா பார்வையிட்டார்.

இதில் டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, டி.ஆர்.டி.ஏ. பி.டி லலிதா, ஆர்.டி.ஓ. நிறைமதி, பெரம்பலூர் நகராட்சி ஆணையர்(பொ) மனோகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) சீனிவாசன், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!