DRAFT POLLING LIST AVAILABLE FOR PUBLIC VIEW Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய திருநாட்டிற்கான வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய வகையில், சரியான முறையிலும், ஆரோக்கியமான வகையிலும் தயாரிக்கும் பெரு முயற்சியில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2023 -ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது.
இதன் முதற்படியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 332 வாக்குச்சாவடி மையங்களிலும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 320 வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை (ஊரக பகுதியில் நகரப்பகுதியில் 1500) கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளை பிரித்தல், வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு மேல் உள்ளவை, பழுதடைந்த கட்டிடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல் மற்றும் இதர காரணங்களுக்காக வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பான பணிகள் கடந்த 12.08.2022 முதல் சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டன.
அவ்வாறு தல ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 18 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 6 வாக்குச்சாவடி மையங்களின் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்கவும், மற்றும் பள்ளி கட்டடத்தின் பெயர் திருத்தத்தின் காரணமாக, 148 குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச்சாவடி மையங்களின் பெயர்கள் மாற்றியமைக்கவும், உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி கட்டமாக 29.08.2022 அன்று உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் பட்டியல் பெரம்பலூர் வாக்குப்பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி வாக்குச்சாவடி மையங்கள் குறித்த பட்டியல் பொது மக்களின் பார்வைக்காக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம். சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் , உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் வரைவு அறிக்கையானது பின்வரும் பெரம்பலூர் மாவட்ட அரசு வலைதளத்தில் (www.perambalur.nic.in) பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் அரசியல் கட்சியினர் தங்களது கூற்று மற்றும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் 06.09.2022 -க்குள் எழுத்து மூலமாக சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் தெரிவித்துக் கொள்ளலாம், என அதில் தெரிவித்துள்ளார்.