Draft voter list for Perambalur, Kunnam assembly constituencies: Collector released in presence of political parties.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் வெங்கட பிரியா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 05.01.2022 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் (147) பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 3,05,617 வாக்காளர்களும், (148) குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,76,988 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,82,605 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற தொடர் திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 475 ஆண் வாக்காளர்களும், 638 பெண் வாக்காளர்களும் மற்றும் 1 இதர வாக்காளரும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 327 ஆண் வாக்காளர்களும், 476 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 4,172 ஆண் வாக்காளர்களும், 5,242 பெண் வாக்காளர்களும், மற்றும் 23 இதர வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,632 ஆண் வாக்காளர்களும், 3,659 பெண் வாக்காளர்கள் மற்றும் 16 இதர வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வெளியிடப்படுகின்ற வரைவு வாக்காளர் பட்டியலின் படி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது 332 வாக்குச்சாவடிகளும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், ஆக மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,97,294 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,44,633 ஆண் வாக்காளர்களும், 1,52,655 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,71,484 வாக்காளர்கள் உள்ளனர். இதில்; 1,33,921 ஆண் வாக்காளர்களும், 1,37,563 பெண் வாக்காளர்களும், 0 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

ஆக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,68,778 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,78,554 ஆண் வாக்காளர்களும், 2,90,218 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

அதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது கூற்று மற்றும் ஆட்சேபனையை 08.12.2022-க்குள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 09.11.2022 முதல் 08.12.2022 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிக்காக சிறப்பு முகாம்கள் 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய நாட்களில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2023 அன்று வெளியிடப்படவுள்ளது.

இளம் வாக்காளர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க இனி ஜனவரி-1, ஏப்ரல் – 1, ஜுலை – 1, அக்டோபர் – 1 என ஆண்டுக்கு 4 நாட்களை தகுதி நாட்களாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முன்பதிவு செய்து கொள்ளலாம், அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் 18 வயது பூர்த்தியானவுடன் பெயர் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைத்திட தக்க ஒத்துழைப்பு வழங்கிடுமாறும்,

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், மாற்றம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் குறித்து பொது மக்களுக்கு உதவி செய்திடவும், விழிப்புணர்வு மேற்கொள்ளவும் ஏதுவாக நாளது வரை வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்யாத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் தனிதனியாக வாக்குசாவடி முகவர்களை நியமனம் செய்திடுமாறும்,

தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறும் தெரிவிக்கப்பட்டது. வருவாய் மற்றும் தேர்தல் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!