Extension of time for uncertified birth records after completion of 15 years : Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெறுவது குடிமகனின் உரிமையாகும். பள்ளியில் சேர்க்க குடும்ப அட்டையில் சேர்க்க, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, விசா மற்றும் அயல் நாடுகளில் குடியுரிமை பெற பெயருடன் கூடிய பிறப்பு சான்று மிகவும் அவசியமாக உள்ளது. குழந்தை பிறந்த ஒரு ஆண்டுக்குள் கட்டணமின்றி குழந்தை பெயரை பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யலாம். பதிவு செய்த தேதியிலிருந்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆனால் காலதாமத கட்டணம் ரூ.200- செலுத்தி குழந்தை பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.
குழந்தை பிறந்து பதிவு செய்த தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்குள் மட்டுமே பெயர் பதிவு செய்ய இயலும். 15 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்ய இயலாது. தற்போது 01.01.2000 க்கு முன் பிறந்த பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் மற்றும் குழந்தை பிறந்து பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியான பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் இந்திய தலைமை பதிவாளரால் அளிக்கப்பட்டுள்ளது. 31.12.2024க்கு பிறகு குழந்தை பெயரை பதிவு செய்ய இயலாது. எனவே பொதுமக்கள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி உரிய படிவத்தில் சான்றுடன் விண்ணப்பித்து, ரூ.200 காலதாமத கட்டணமாகவும், சான்று நகல் ஒன்றுக்கு ரூ.200 செலுத்தி பிறப்பு சான்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.