Group – 4 Exam : 19 thousand write tomorrow in Perambalur District: Perambalur Collector Info!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற உள்ள தொகுதி IV தேர்வை 19,039 நபர்கள் எழுதவுள்ளனர் பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற உள்ள தொகுதி IV பல்வேறு பணிகளுக்கான எழுத்து தேர்வு 24.07.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

எழுத்து தேர்வினை 64 மையத்தில் 19,039 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளவும், மேலும் தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையத்திற்கும் தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது. இத்தேர்வினை கண்காணிப்பதற்காக 22 முதன்மை கண்காணிப்பாளர்களும், 22 நடமாடும் குழு மற்றும் 4 துணை ஆட்சியர் தலைமையில் பறக்கும் படை குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு தேர்வு மையத்தின் பொறுப்புகளை 1 முதன்மை கண்காணிப்பாளர் மேற்கொள்வார். 20 நபர்களுக்கு ஒரு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு தேர்வு மையத்தில் 400 நபர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 1 தேர்வு மையத்திற்கு 1 ஒளிப்பதிவாளர் வீதம் 64 தேர்வு மையத்திற்கு 64 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து தேர்வு மையத்திற்குள் மற்றும் தேர்வு மையத்திற்கு வெளியிலும் என 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இக்கூட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன், உதவி ஆணையர் (கலால்) சோபா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சுப்பையா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பாரதி வளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!