In Perambalur district, Gramma sabha meeting in all panchayats on the occasion of Gandhi Jayanti
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் சார்பில் விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அக்.2 காந்தி ஜெயந்தி தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது.
கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக் குழு தலைவர் துணைத் தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தாங்கள் வாக்களர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும்.
அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் கூட்டத்திற்கு தலைமையேற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்துகொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்படுத்துதல் குறித்து கிராம சபையில் வாசித்தல் வேண்டும். நெகிழி பயன்பாட்டினை தவிர்த்திட விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கூட்டமானது பாதுகாப்பான பொதுவெளியிலோ அல்லது காற்றோட்டமான கட்டிடத்திற்குள்ளாகவோ நடத்திட வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். கூட்டம் நடைபெறும் இடத்தில் முழுமையாக தூய்மை செய்து கிருமிநாசினி பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்திட வேண்டும். அனைவருக்கும் கிருமிநாசினி, முகக்கவசம் வழங்கிட வேண்டும். கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியான 6 அடியினை கடைபிடிக்கவேண்டும்.
கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.