In Perambalur Independent Day: laid carrying the national flag of the District Collector.

perambalur-2016-independence-day பெரம்பலூர் மாவட்ட சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வரும் க.நந்தகுமார், தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 171 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரத்து 160 மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று (15.8.2016) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர், பின்னர் நடந்த காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மனோகரன், முதலாம் படைப்பிரிவிற்கு உதவி ஆய்வாளர் குணசேகரன், இரண்டாம் படைப்பிரிவிற்கு மாலதி, மூன்றாம் படைப்பிரிவிற்கு உதவி ஆய்வாளர் கலையரசன் ஆகியோர் தலைமையேற்று வழி நடத்தி சென்றனர். மேலும் தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை மற்றும் நாட்டு நலப்பணிதிட்ட மாணவ, மாணவிகளும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பறக்கவிட்டனர். பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் 15 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 23 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 83 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்த முன்னாள்படைவீரர்களின் 2 குழந்தைகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான பரிசுத்தொகையினையும், வருவாய்த்துறையின் சார்பில் 42 நபர்களுக்கு ரூ.17.75 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களையும், 17 நபர்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.1.38 லட்சம் மதிப்பிலும், இயற்கை மரண உதவித்தொகையாக 13 நபர்களுக்கும்,

1.78 லட்சம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 நபருக்கு விலையில்லா தையல் எந்திரமும், 6 நபர்களுக்கு விலையில்லா சக்கர நாற்காலிகளையும் ரூ.28,940 மதிப்பிலும், தோட்டக் கலைத் துறையின் சார்பில் 1000 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.4லட்சத்து 67 ஆயிரத்து 500 மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.1லட்சத்து 32 ஆயிரத்து 704 மதிப்பிலும்,

கூட்டுறவுத்துறையின் மூலம் பெருங்கடன் மற்றும் நேரடிக்கடனாக இரண்டு நபர்களுக்கு ரூ.49.92 லட்சம் மதிப்பிலும், தாட்கோ மூலம் 10 சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனும், ஒருவருக்கு மானியத்துடன் கூடிய டாடா ஏஸ் வாகனமும் என மொத்தம் 3.70லட்சம் மானிய உதவியுடன், 7.70 லட்சம் வங்கிக்கடனுக்கான ஆணைகiயும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், மகளிர் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடிக்கடனும், 10 குழுக்களுக்கு ஆதார நிதிஉதவியும் என மொத்தம் 15 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 11.73 லட்சம் வழங்குவதற்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 18 நபர்களுக்கு ரூ.66,818 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும், சமூக நலத்துறையின் மூலம் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 11 நபர்களுக்கு 5 லட்சத்து 30 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என பல்வேறு துறைகளிலும் உள்ள மக்கள் நலத்திட்டங்களின் மூலம் 171 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரத்து 160 மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர், செஞ்சேரி வித்யாஸ்ரம் பள்ளியின் 51 மாணவ-மாணவிகள் வந்ததேமாதரம் என்ற தலைப்பிலும், ஈச்சம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப் பள்ளியின் 30 மாணவ-மாணவிகள் சுதந்திரமும் சுதேசியமும் எனற தலைப்பிலும்,

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் 110 மாணவ-மாணவிகள் சுதந்திர கொண்டாட்டம் என்ற தலைப்பிலும், பெரம்பலூர் சாரதாதேவி கலை அறிவியல் கல்லூரியின் 121 மாணவ-மாணவிகள் இளைஞர் கையில் இந்திரா என்ற தலைப்பிலும், பாரதிதாசன் மாதிரி உறுப்பு மகளிர் கல்லூரி மாணவிகள் 31 பேர் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பிலும், சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியின் 51 மாணவ-மாணவிகள் தமிழக மீனவர்களின் வாழ்க்கை என்ற தலைப்பிலும் என ஆகமொத்தம் 394 மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலக பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!