Krishnapuram villagers block the road to provide drinking water!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அம்பேத்கர், மாரியம்மன் கோவில் தெருக்களுக்கு குடிநீர் கடந்த ஒரு வாரமாக வினியோகம் செய்யப்படவில்லை. பொது குடிநீர் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இது தொடர்பாக அந்த பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் கலியன் என்பவரிடம் அப்பகுதி மக்கள் கேட்டபோது அவர் முறையாக பதிலை சொல்லாம தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்பேத்கர் நகர் மற்றும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இன்று காலை சுமார் 7 மணி அளவில் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வெங்கலம் ஊராட்சித் ராஜ் பிரபு, ஊராட்சி செயலாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் தனஞ்ஜெயன் மற்றும் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டரை மாற்றி விடுவதாகவும், உடனடியாக மின் மோட்டார் பழுது நீக்கம் செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர்.
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.