Manu Shastra, which denigrates women, should be banned; Resolution in Perambalur meeting of Indian National Mother Samela!
பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க வேண்டும், பெண்களை இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை இந்திய தேசிய மாதர் சம்மேளத்தின் பெரம்பலூர் மாவட்ட பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றி வலியுறுத்தப்பட்டுயுள்ளது.
பெரம்பலூர் தீரன் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இந்திய தேசிய மாதர் சம்மேளத்தின் பெரம்பலூர் மாவட்ட பேரவைக் கூட்டம், மாவட்ட அமைப்பாளர் கல்யாணி தலைமையில் நடந்தது. மாதர் சம்மேளன நிர்வாகிகள் அமுதா, தேவி, திவ்யா, தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் சம்மேளன மாநிலத் தலைவர் பி. பத்மாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் வீ. ஞானசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக் கூட்டத்தில், தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கீஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க வேண்டும். ஆண் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் பெண்களுக்கும் வழங்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வி. ஜெயராமன், கட்சி நிர்வாகிகள் ஆ. தங்கவேல், ப. முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.