Next Sunday Exam for Vacant Village Assistant Posts : Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்களை கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகின்ற 04.12.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் வட்டத்திற்கு எழுத்துத் தேர்வு அரசு மேல்நிலைப் பள்ளி, துறையூர் சாலை, பெரம்பலூர் மையத்திலும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு எழுத்துத் தேர்வு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை ஆகிய மையங்களிலும், குன்னம் வட்டத்திற்கு எழுத்துத் தேர்வு மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பூர் மற்றும் அரசினர் மேல்நிலைப் பள்ளி, வேப்பூர் ஆகிய மையங்களிலும், ஆலத்தூர் வட்டத்திற்கு ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி, மேலமாத்தூர் மையத்திலும் நடைபெறவுள்ளது.
இணைய வழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண் / மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும், அதன்மூலம் அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணையவழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிச் சீட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 09.30 மணி முதல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 09.50-க்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் காலை 10.50-க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் கருப்பு பால் பாயின்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதிச்சீட்டு மற்றும் கருப்பு பால் பாயின்ட் பேனாவைத் தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது. விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது என தெரிவித்துள்ளார்.