Perambalur: A deer that went to drink water fell into a stone quarry pit and died!

பெரம்பலூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம், மருதடி, நாரணமங்கலம், சிறுவாச்சூர் பகுதியில் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. அவ்வப்போது, தண்ணீர், இரை தேடி மான்கள் சமவெளிக்கு வருவது வழக்கம். இன்று காலை தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று, நாட்டார்மங்கலம் அருகே உள்ள வெள்ளிமலை கல்குவாரி பகுதிக்கு வந்தது. அப்போது அங்குள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட கல்குவாரி சுரங்க பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தது.
இதைப் பார்த்தவர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனச்சரக அலுவலர் பழனிகுமாரன், வனவர் சமீர் அகமது, வனக்காப்பாளர் மணிகண்டன், வனகாவலர் திலகவதி ஆகியோர் கொண்ட குழுவினர் வந்து கல்குவாரியில் ஆய்வு செய்தனர். பின்னர் இறந்த மானை மீட்டு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்தனர். இறந்த ஆண் மான் மூன்றரை வயதுடையது என தெரியவந்தது. பின்னர் மானை வனத்துறையினர் காப்பு காட்டில் கொண்டு சென்று புதைத்தனர். இதே போல் நாட்டார்மங்கலம் ஊருக்கு வடக்கே குத்தகை உரிமம் முடிவு பெற்ற குவாரியில் ஏற்கனவே 3 மான்கள் விழுந்து இறந்துள்ளன என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். மேலும், வனத்தில் உள்ள விலங்குகள் ஊருக்குள் தண்ணீர் தேடி வருவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497