Perambalur: Actress’s car driver dies after being hit by an unidentified vehicle! Another is in intensive care: Actress survived by standing alone!

சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகையான தேவிப்பிரியா (43), சினிமா பட சூட்டிங் ஒன்றில் பங்கேற்பதற்காக அவருக்கு சொந்தமான காரில் சென்னையில் இருந்து தேனி நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தார். காரை சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் முத்துகணேஷ்(40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் 10 ஆண்டுகளாக தேவிப்பிரியாவிடம் டிரைவராகவும், உதவியாளராகவும் இருந்து வந்தார். இவர்களுடன் ஆக்டிங் டிரைவருமான தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த பாஸ்கரன் மகன் திவாகர் (36), என்பவரும் உடன் வந்துள்ளார்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சென்ற போது காரின் டயர் பஞ்சரானதால், சாலையோரமாக காரை நிறுத்தி, பஞ்சரான டயரை டிரைவர் முத்து கணேஷ், திவாகர் உதவியுடன் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முத்து கணேஷ் மீதும் திவாகர் இருவர் மீதும் மோதியது. இதில் டிரைவர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த திவாகர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்தில் பலியான முத்து கணேசனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த பாடலூர் போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நடிகை தேவிப்பிரியாவின் கண் முன்னே நிகழ்ந்த இந்த சாலை விபத்தில், அவரது கார் டிரைவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவத்தால் அவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி கதறி அழுதார். பின்னர், படசூட்டிங்கை ரத்து செய்து விட்டு, முத்துகணேசின் உடலுடன் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனார்.
சமீப நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர் போலீஸ் எல்லைப் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வருவதால், காவல் துறையினர் முறையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி விபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆலத்தூர் – பாடாலூர் பகுதிகளில் எதிர் திசையில் வரும் டிப்பர் லாரிகளையும், சாலை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்றி சாலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக சாலை தெரியும் அமைக்க சுங்கம் வசூலிக்கும் நிறுவனத்திற்கு உத்திரவிட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497