Perambalur: BC, MBC, and Denotified Community members can apply for financial assistance under the TAHDCO loan scheme; Perambalur Collector announces.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக்கூறுகள் உள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.

மேலும் இக்கழகம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(மற்றும்), சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டுக் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கப்படுகிறது.

தனிநபர் கடன் மற்றும் குழு கடன் பெற, விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் / வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7% மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை 8%. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 6 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.

குழுக்கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில் / வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரையும் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 2 ½ முதல் 3 ஆண்டுகள். சுய உதவிக்குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரு பாலருக்கான சுய உதவிக்குழு உறுப்பினர்களும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000/-வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7%. திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்ககளின் இணைபப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இக்கழக இணையதள முகவரியில் (https://tabcedco.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி கடன் பெற, விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும் (சாதி சான்றிதழ்).குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் கிராமம் நகர்ப்புறம் பாகுபாடின்றி வருமானச் சான்றிதழ். அ.மாநில அரசின் வருமானச் சான்றிதழ் வழங்கும் தகுதி வாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். (அல்லது),ஆ.வர்த்தமானி பதிவு பெற்ற அதிகாரியால் (Gazetted Officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள், பிஎச்டி, முதுநிலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் (SAT, GMAT, GRE அல்லது பாடநெறியில் சேருவதற்குப் பொருந்தக்கூடிய பிற தொடர்புடைய மதிப்பெண்கள் போன்றவை) மூலம் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் (சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து சேர்க்கை / சலுகை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும்) (IELTS அல்லது TOEFL போன்ற முற்றிலும் மொழித் திறன் தேர்வை அடிப்படையாகக் கொண்டதல்ல).

ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக கடன் வரம்பு ரூ.25,00,000/-க்கு உட்பட பாடத்திட்டத்தின் செலவில் 85%, புதுதில்லியின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமும் மீதமுள்ள 15% தமிழ்நாடு அரசால் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். கடன் தொகையானது சேர்க்கை கட்டணம், கல்வி கட்டணம், புத்தகங்கள், எழுது பொருட்கள், தேர்வு, ஆய்வகம் மற்றும் நூலகக் கட்டணம், உண்டி மற்றும் உறையுள் கட்டணங்கள் மற்றும் கடன் காலத்திற்கான காப்பீட்டு கட்டணங்கள் உள்ளடக்கியது.கல்வி நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் கடன் தொகை விடுவிக்கப்படும் (செமஸ்டர் அல்லது அரையாண்டு அடிப்படையில்), முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து கட்டணத் தவணைகள் விடுவிக்கப்படும். வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை.வட்டி விகிதம் ஆண்டிற்கு 8% ஆகும்.

கடன்கள் வழங்கப்படும் பாடத்தின் வகை மற்றும் காலத்தை பொருட்படுத்தாமல் மாணவர்களிடமிருந்து மீள பெறுவதற்கான தடைக்காலம் 5 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிமிருந்து அதிகபட்சமாக மீட்கும் காலம் 10 ஆண்டுகள் ஆகும்.அதாவது 5 வருட தடைக்காலம் உட்பட, அதாவது கடன் வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்பட் வேண்டும். கடனை திருப்பி செலுத்தச் தொடங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் கடனை திருப்பி செலுத்தலாம். இதற்கான முன் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பப் படிவம் https://tabcedco.net என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்பிக்க வேண்டும்.

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மேற்காணும் கடன் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!