Perambalur: At the 69th National Level Table Tennis Tournament, Minister Sivashankar presented medals and trophies to the winners!

பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பாக 69வது தேசிய அளவிலான மேசைபந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதக்கங்களையும், வெற்றிக் கோப்பைகளையும் வழங்கினார். கலெக்டர் ந.மிருணாளினி தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

கடந்த 26.12.2025 அன்று மேசைக் பந்தாட்ட போட்டிகள் தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஹரியானா, குஜராத், இமாச்சலப் பிரதேஷ், கேரளா, திரிபுரா,புதுச்சேரி, ராஜஸ்தான், கோவா, கர்நாடகா, பஞ்சாப், மணிப்பூர், சட்டீஸ்கர், நவோதயா வித்யாலயா, பீகார், உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ், ஒடிசா, சி.பி.எஸ்.இ பள்ளிகள், தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர், கேந்திர வித்யாலயா, அஸ்ஸாம், சண்டிகர், வித்யா பாரதி, டெல்லி உள்ளிட்ட 36 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் council for the India School, IPSC, IBSSO ஆகிய குழுக்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

மகளிர் குழுப்போட்டிகள், ஆடவர் குழுப்போட்டிகள் மற்றும் ஒற்றையர் போட்டிகள் என ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், சி.பி.எஸ்இ. குழுவைச் சேர்ந்த அக்ஷய் புஷன் முதலிடத்தையும், சி.ஐ.எஸ்.இ குழுவைச் சேர்ந்த அதர்வா நவரேன்ஞ் இரண்டாம் இடத்தையும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீப்ராஜ் பட்டாஜார்ஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷ்ரேயாதார் முதலிடத்தையும், மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த சுவர சந்தீப் கர்மாக்கர் இரண்டாம் இடத்தையும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அங்கோலிக்கா சக்ரபோர்ட்டி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான குழுப்போட்டிகளில் மகராஷ்ட்ரா மாநில வீராங்கனைகள் முதலிடத்தையும், சி.பி.எஸ்.இ. குழுவினர் இரண்டாம் இடத்தையும், கே.வி.எஸ் குழுவினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். தமிழ்நாடு மாநில வீராங்கனைகள் அணியினர் நான்காம் இடத்தைப் பிடித்தனர்.

ஆண்களுக்கான குழு போட்டிகளில் சி.பி.எஸ்.இ. குழு வீரர்கள் முதலிடத்தையும், அஸ்ஸாம் மாநில வீரர்கள் குழுவினர் இரண்டாம் இடத்தையும், மேற்கு வங்க வீரர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மகாராஷ்டிரா அணியினர் நான்காம் இடத்தைப் பிடித்தனர். முதலிடத்தைப் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கலப் பதக்கம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விசுவநாதன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!