Perambalur: Co-optex Diwali special sale begins!

பெரம்பலூர் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையினை கலெக்டர் எம்.எல்.ஏ குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி விற்பனையில் 30% சிறப்புத் தள்ளுபடியில் விற்பனை செய்கிறது. புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் விற்பனைக்காக தருவிக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூர் கோ-ஆப் டெக்சில் கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்கு ரூ.32 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2026க்கு ரூ.42 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆன்லைனில் விருப்பத்திற்கேற்ப ரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மேலாளர் ஆர். வைரமுத்து தாசில்தார் பழனிச்செல்வன், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ரேகா மற்றும் அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!