Perambalur collector consultation meeting with Ration shop sellers!

பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலக கூட்டரங்கில், 282 நியாய விலை கடை விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பொது விநியோக திட்டம் என்பது ஒரு இன்றியமையாத திட்டம் ஆகும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் பொது விநியோக திட்டத்தினை சிறப்பாக செயல் படுத்தினால் மட்டுமே பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற முடியும். அப்படிப்பட்ட சிறப்பான திட்டத்தில் பணிபுரியும் விற்பனையாளர்கள் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அதனை மேலும் சிறப்பாக கொண்டு செல்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அனைத்து விற்பனையாளர்களும் தங்களது கடைகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் பொறுப்புடனும், இணக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர்களிடம் கனிவுடன் பேசி பழக வேண்டும். விற்பனை கருவி (POS Machine) இணைப்பில் பிரச்சனை ஏதேனும் இருந்தால் உடனடியாக அதனை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடையின் தகவல் பலகையில் விற்பனையாளர்களின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்டவைகளும் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை குறித்து கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தேவைகேற்ப முன்னுரிமை அடிப்படையில் நியாய விலைக்கடைகளின் பராமரிப்பு பணிகளும், புதிய கடைகளுக்கான கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என பேசினார்.

தொடர்ந்து விற்பனை பணிகளை நீண்ட நாட்களாக சிறப்பாக மேற்கொண்டு பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற வட்டாரத்திற்கு 3 நபர்கள் வீதம் 4 வட்டாரத்திற்கு 12 விற்பனையாளர்களின் செயல்பாடுகளை பாராட்டி கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன், துணை பதிவாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!