Perambalur: Collector inaugurates planting of 1350 saplings!

தமிழ்நாடு அரசின் வனக்கொள்கையானது மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கு 33 சதவீதம் என்ற இலக்கை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டின் கணக்கின்படி வனப்பரப்பானது 23.84 சதவீதம் உள்ளது. அதனை எதிர் வரும் 10 ஆண்டுகளில் 33 சதவீதம் என்ற இலக்கை எட்டும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் பசுமை தமிழ் நாடு இயக்கம் 24.09.2022-ல் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தை செயல்படுத்த கலெக்டர் தலைமையில் மாவட்ட பசுமைக்குழு உருவாக்கப்பட்டு வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலமாக மரக்கன்றுகளை நடவு செய்து பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு 2.37லட்சம் மரக்கன்றுகளும் 2023-ஆம் ஆண்டு 10.05லட்சம் மரக்கன்றுகளும் 2024-ஆம் ஆண்டு 13.34லட்சம் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டு 12.49லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பசுமை தமிழ்நாடு இயக்க நாளை முன்னிட்டு இன்று 1350 மரக்கன்றுகளை வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணைந்து நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்டையில் கிரிக்கெட் மைதானத்தில் 200 மரக்கன்றுகளும் எறையூர் சர்க்கரை ஆலையில் 500 மரக்கன்றகளும், அசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கீழப்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தலா 325 மரக்கன்றுகளும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் மாணவ மாணவிகளுடன் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்த கலெக்டர், பசுமை தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வினாடி வினா, ஓவியப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நகராடசி துணைத் தலைவர் ஆதவன், வனத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497