Perambalur: Collector’s information on scholarships for educated unemployed youth!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.01.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலை வாய்ப்பற்ற உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10ஆம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 31.12.2024 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளியிறுதி வகுப்பு வரையிலான தகுதிக்கு மாதம் ரூ.600/- வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.750/- வீதமும் மற்றும் பட்டபடிப்புக்கு மாதம் ரூ.1000/- வீதம் வழங்கப்படும். இதர மனுதாரர்களை பொறுத்தவரையில் பள்ளி இறுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200/- வீதமும், பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ரூ.300/- வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.400/- வீதமும் மற்றும் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.600/-வீதம் வழங்கப்படும். 

மாற்றுத்திறனாளிகளுக்கு உச்சவயது வரம்பு ஏதுமில்லை. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  இந்த உதவித் தொகையினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.12.2024 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும்  இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும்  இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்சவயது வரம்பு ஏதுமில்லை.

உதவித்தொகை விண்ணப்பபடிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் 28.02.2025 ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். 

 மேலும் உதவித்தொகை பெற்று வரும் பயன்தாரர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு ஆண்டு தோறும்  அளிக்க வேண்டிய  சுய உறுதிமொழி ஆவணம்  பிப்ரவரி 28.02.2025 அன்றுக்குள் சமர்ப்பித்து தொடர்ந்து பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!