Perambalur: Electricity is being generated as per demand in Tamil Nadu; Additional Chief Secretary Radhakrishnan informs!

பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அரசு கூடுதல் தலைமைச்செயலாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த பின், அரசு கூடுதல் தலைமைச்செயலாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
விருதுநகரில் மின்துறை தொடர்பான ஆய்வு முடித்து சென்னை செல்லும் வழியில் பெரம்பலூரில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மழை, அதீதகாற்று போன்ற இயற்கை சீற்றங்களால் மின்கம்பங்கள் சேதமடைதல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின்போது மின்கம்பங்கள், மின்கம்பிகள் சேதமடைந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்து, தேவைப்பட்டால் புதியதாக மாற்றுவதற்கு தேவையான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. காற்றாலைகள் மூலமும், சூரிய மின்சக்தியின் மூலமாகவும் மின் உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.
இதுஒரு சேவைத்துறை என்பதால் பொதுமக்களின் கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகின்றது. பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் எளிமையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 133 துணை மின் நிலையங்கள், 56 பெரிய மின் நிலையங்கள் ஒப்பந்த நிலையில் உள்ளது. விரைவில், அனைத்து பணிகளும் முடிக்கப்படும். தமிழ்நாடு வளர்ச்சிப்பதையில் முன்னோடி மாநிலமாக விளங்குவதில் மின்சாரத்துறையின் பங்கும் உள்ளது, விவசாயிகள் மின் இணைப்புகள் விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. பொதுமக்களுக்கு இது போன்ற தகவல்கள் முழுமையாக சென்று சேர வேண்டும், என தெரிவித்தார். கண்காணிப்பு பொறியாளர் மேகலா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497